நிலவு தேய்ந்த அந்தகார இரவுகள்
காற்றுக்கு வேலி போடும் ஒற்றைப் போர்வை
ஒரே தலையணை !
போர்வைக்குள் பொழியும் நிலவாய் நீ !
முகம்பார்த்து விரல்மேய
நவரசம் காட்டும் திரை !
உன் நெளிவுகளில்
நிலைகொள்ளும் கரம் !
அவ்வப்போது சிணுங்கும் நீ !
காதோரம் உன் ஸ்பரிசக் கதகதப்பு !
உன்னில் படிந்தே பேசும் என் உதடுகள் !
உன்மத்தம் கொண்ட விழிகள் !
என் வியர்வையில் குளிக்கும் நீ !
உன் அயர்வினை அறியா நான் !
நிசப்தமான நின் மூச்சு !
உன் உயிர் இருக்கும் இடம் நாடி
உயிர் ஊட்டும் நிமிஷங்கள் !
பின் ஏகாந்த நினைவுகள் !
மீண்டும் சிணுங்கும் நீ..!
அள்ளி அணைக்கும் நான்...!
மெத்தைக்கு கேளாத சத்தத்தில்
முத்தப் பயிர் செய்தோம் !
நீண்டன ஒய்யார இரவுகள்...
நகர்ந்தன நாட்கள் ...
உன் நளினம் மாறவும் இல்லை !
உன் பருத்த தேகம் மீது
மையல் குறையவும் இல்லை !
கூடாத பொழுதும் இல்லை
சேராத இடமும் இல்லை !
தேடிவரும் போதெல்லாம்
திகட்டாத இன்பம் தந்தாய் !
இன்றோ நாடி உன்னை நிக்கையிலே
நெடுதூரம் போனதென்ன ?
ஒட்டிய வயிறுடனும் ஒய்யார கலருடனும்
பக்கம் பலர் இருந்தும்
பருத்தவளே ! கருத்தவளே !
உனைத்தானே உள்மனசு தேடுதடி !
நீபோன வழியில் விழி வைத்து நிற்கிறேன் !
வந்துவிடு என் 'நோக்கியா' ஃபோனே !
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...