இன்று என்னை தவிக்கவிடுகிறாய்
உண்ணவும் மறுத்திருப்பேன்
உடுக்கவும் மறுத்திருப்பேன்
உன்னை அணைக்க மறுத்தேனா?
உன்னோடு நான் கொண்ட காதல்
உலகையே கண்முன் மறைத்திடும்
சில மணிகள் உன்னை மறப்பினும்
விலகாது கண்மணிக்குள் வருவாய்
நம் கூடல்கள் பலவேளை மெதுவாய்
தனியறைக்குள் அரங்கேறிட - சிலவேளை
நம்மை மறந்து பொதுவாய்
வரையறை மீறி அரங்கேறியதும் உண்டே..
அன்றும் இப்படித்தான் வகுப்பறையில்
முற்றாய் அணைத்துக்கொண்டாய்
மதுகோப்பையில் வீழ்ந்த வண்டாய்
இது சுகம் என்று திளைத்தே போனேன்
உன்னை என்னிடமிருந்து விடாப்பிடியாய்
பிரித்தது வாத்தியார் கம்புத்தடி- இருந்தும்
பிரிந்தோமா? அதே பாடவேளைகளில்
கொண்டல் மர நிழலில் கொஞ்சிக்கொண்டோம்
கொண்ட தாபங்கள் போக்கிக்கொண்டோம்
அரச மர இடையில் உரசிக்கொண்டோம்
காலியான வகுப்பு மேசைகளில்
சரசம் கொண்டோமே.. ஏன் நீயும்
விரசம் கொண்டாய் இன்றென்னோடு?
பொழுது இது என்று ஆய்ந்தா
குழாவிக்கொண்டோம்?
விடிகாலை குளிரென்ன
சுட்டெரிக்கும் வெயிலென்ன
மதி மயக்கும் அந்திப்பொழுதென்ன
நிலாக்காயும் நேரமென்ன
நடுநிசியும் வைகறையும் பேசிக்கொள்ளும்
வேளையிலும் கட்டிலில் உழுது பயிர் செய்தோம்.
இன்று காலையும் நெருங்குது நீயோ
வந்தணைக்க மறுக்கிறாய்
உன் முத்தங்கள் தேடி தவித்திருக்கிறேன்..
உனை நான் தழுவ
இமை விழி தழுவ
இதயம் ஓசை குறைக்க
இனியும் தவிக்கவிடாது
பகலவன் வருமுன் எனை
பாலனாய் அணைத்திடேன்
என் நித்திராதேவி..
நித்திராதேவிக்கு எழுதிய ஒருமடல்.. யாரும் தப்பு தப்பா நினைச்சா நான் பொறுப்பில்லை. |
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...